Thursday, July 07, 2005

திருக்குறள் மாநாட்டுக்கு மேரிலாந்து அரசு கெளரவிப்பு

திருக்குறளை கெளரவிக்கும் விதமாக சூலை எட்டாம் தேதி, 2005 முதல் பத்தாம் தேதி, 2005 வரை சர்வதேச திருக்குறள் மாநாட்டு வாரமாக மேரிலாந்தில், மேரிலாந்து கவர்னரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைப் படிப்பதற்கு கீழே இருக்கும் படத்தில் சொடுக்கவும்.



Image Hosted by Your Image Link

நன்றி,

திருக்குறள் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு

Friday, May 13, 2005

திருக்குறள் நாட்டிய நாடகம்



இந்த உலகில் ஆயிரக்கணக்கான பேர் திருக்குறளை ஆழ்ந்து படித்திருக்கிறார்கள், பேசியிருக்கிறார்கள், பாடல்களாகப் பாடியிருக்கிறார்கள். ஆனால் திருக்குறளை நாட்டிய நாடகமாக ஆடியவர்கள் மிகவும் குறைவு. இன்றைய சிக்கல்கள் நிறைந்த உலகத்தில் திருக்குறள் கூறும் நன்னெறி உணர்வுகளைத் தேடும் ஒரு நாட்டிய நாடகத்தை திருக்குறள் மாநாட்டில் நமக்கு அளிக்கவிருக்கிறார்கள் பத்மராஜா சகோதரிகள். 37 திருக்குறள்களைக் கொண்டு தயாரிக்கப் பட்ட இந்த நாட்டிய நாடகம் புத்துணர்ச்சி அளிக்கும் விருந்தாக அமையும். புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர்களான தனஞ்ஜெயன் தம்பதிகளின் திறமையான கலை நயத்தின் அடிப்படையில் அமைந்த இந்த நடன அமைப்பு, திருவள்ளுவரின் அர்த்தமுள்ள இரண்டு வரித் தமிழ் கவிதைகளை உயிரூட்டப்பட்ட ஒரு நடனமாக நம் கண் முன் நிறுத்துகிறது. பத்து தலை இராவணன் போன்ற புராண கதாபாத்திரங்களோடு அன்னை தெரேஸா உள்ளிட்ட நிகழ் கால நாயகர்களையும் இந்த நடனத்தில் பிரதிபலிக்கிறார்கள்.



12 வருடங்களாக பரதநாட்டியம் பயின்று வரும் கவிதா, மீரா, அஞ்சனா என்கிற பத்மராஜா சகோதரிகள், விர்ஜீனியாவில் உள்ள யோகவில் (Yogaville) கிராமத்தில் தனஞ்ஜெயன் தம்பதிகளால் வருடா வருடம் நடத்தப்படும் நாட்டிய முகாம்களில் சிறப்புப் பயிற்சி எடுத்துவந்தார்கள். கலிபோர்னியா பகுதியிலும் கிழக்குக் கரை மாகாணங்களிலும் பல நடன நிகழ்ச்சிகளை இந்தச் சகோதரிகள் நடத்தியிருக்கிறார்கள். இந்த 37 திருக்குறள்களையும் நாட்டியமாக்க பத்மராஜா சகோதரிகளுக்கு பயிற்சி அளித்த தனஞ்ஜெயன் தம்பதிகள் கூறுவது:
"திருவள்ளுவரின் அழியாத ஞான வரிகளை கவிதா, மீரா, அஞ்சனா சகோதரிகளின் நாட்டியத்தின் மூலம் உங்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மனித வாழ்க்கையின் மேம்பாடு பற்றிய தத்துவத்தை நாட்டிய மொழியில் சொல்வது மிகக் கடினமான செயல். இதை நாங்கள் அறிவை வளர்க்கும் விதமாகவும், களிப்பூட்டும் விதமாகவும் பல புராண மற்றும் நவீன சம்பவங்களை உள்ளடக்கியும் வடிவமைத்திருக்கிறோம். பத்மராஜா சகோதரிகள் திருவள்ளுவரின் ஒழுக்க கோட்பாடுகளை வரும் தலைமுறைகளிடையே பரப்புவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சி பாராட்டப்படவேண்டிய ஒன்று."

அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய அம்சங்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சி தற்காலத்துப் பார்வையாளர்களுக்கு தமிழ் மொழியின் ஆழத்தையும், அழகையும் பற்றிய வியப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Friday, April 01, 2005

வாசிங்டன் டிசியில் திருவள்ளுவர் சிலை!

பன்னாட்டு திருக்குறள் மாநாடு சம்பந்தமாக மற்றுமொரு சுவையான செய்தி!

மாநாட்டை முன்னிட்டு திருவள்ளுவரின் சிலை ஒன்று வாசிங்டன் டிசி பகுதியில் உள்ள ஒரு அரங்கத்தில் நிறுவப்படும். இரண்டிலிருந்து மூன்றடி உயரமுள்ள இந்தச் சிலை, தொழிலதிபர் வி.ஜி. சந்தோசம் அவர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்டது. சென்ற வருடம் வாசிங்டனில் நடந்த திருக்குறள் கூட்டம் ஒன்றிற்கு வந்திருந்த அவர், திருக்குறள் மீது வாசிங்டன் பகுதி தமிழர்கள் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து வியந்து பாராட்டி இந்த நன்கொடை யோசனையைக் கூறினார். திருக்குறள் ஆர்வலர்கள் யாவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். முதலில் ஆறடி உயர சிலையை நிறுவ முடிவெடுக்கப்பட்டிருந்தது. இவ்வளவு உயரமான சிலையை திறந்த வெளியில் நிறுவுவதில் பனி, மழை காரணங்களால் சில சிரமங்கள் இருப்பதால், இப்போது உயரம் சற்று குறைக்கப்பட்டு அரங்கத்தின் உள்ளேயே நிறுவ ஏற்பாடு செய்யப்படும். இந்தச் சிலை சென்னையிலிருந்து வாசிங்டனுக்கு ஜூன் மாத இறுதியில் கப்பலில் கொண்டுவரப்படும்.

மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு

Tuesday, March 15, 2005

பன்னாட்டு திருக்குறள் மாநாடு 2005



International Thirukkural Conference
July 9-10 2005
Washington D.C, USA

வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை(FeTNA), வாசிங்டன் டிசி தமிழ்ச் சங்கம், மற்றும் பிற தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த திருக்குறள் மாநாட்டை கொலம்பியா, மேரிலாந்தில் நடத்தவிருக்கின்றன. முனைவர் வா.சே. குழந்தைசாமி - பல பல்கலைக்கழகங்களின் முன்னாள் துணை வேந்தர், வாழும் வள்ளுவம் என்ற புத்தகத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர், பத்மஸ்ரீ விருது பெற்றவர், மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறார். அமெரிக்கா, ஐரோப்பா, ஐக்கிய ராஜியம், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இந்தச் செய்தியை உலகெங்கும் வாழும் தமிழ் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மாநாட்டைப் பற்றி மேலும் விவரங்களைத் அறிந்து கொள்ள, இந்த இணைய தளத்தைப் பாருங்கள்: http://www.thirukkural2005.org . உங்களது கருத்துக்களை பின்னூட்டஙகள் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நன்றி,
மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு

பன்னாட்டு திருக்குறள் மாநாட்டின் குறிக்கோள் என்ன?

மனித வரலாற்றில் எத்தனையோ சமூக மற்றும் மதத் தலைவர்கள், முனிவர்கள், தத்துவ ஞானிகள் இருந்திருக்கிறார்கள். இவர்களை சிந்திக்க வைத்த பல அம்சங்களில் கடவுள் நம்பிக்கை, ஒழுக்கம், வாய்மை, மனிதனின் சிக்கலான உணர்வுகள், வாழ்க்கையின் பொருள், மத நல்லிணக்கம் போன்றவை முக்கியமானவை. வாழ்க்கையின் பல அம்சங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து நடுநாயகமான, நிலையான உண்மைகளை நிலைநாட்டும் ஒரு படைப்பையோ, படைப்பாளியையோ பார்ப்பது மிகவும் அபூர்வம்.

திருவள்ளுவரின் படைப்பான 'திருக்குறள்', இப்படிப்பட்ட பல அம்சங்களைக் கொண்டது. திருக்குறள் வெரும் தத்துவங்களை மட்டுமின்றி, கலையுணர்வும் கொண்டு படைக்கப்பட்டது. தமிழ் மொழியின் கவித்துவத்தை திருவள்ளுவர் திருக்குறளில் சிறப்பாக நிறுவியிருக்கிறார். இந்த மா மேதையை தமிழ் ஆக்கிரமித்து, ஊக்குவித்திருப்பதை நம்மால் திருக்குறளைப் படிக்கும் போது உணர முடிகிறது. திருக்குறள் ஒரு மனிதனின் சமூக-பொருளாதார நிலைக்கு அப்பாற்பட்டு அவனைச் சென்றடையும் தன்மை வாய்ந்தது.

உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானிகளான புத்தர், அரிஸ்டாட்டில், கன்ப்யூஷியஸ், ப்ளாட்டோ, மாக்கியவெல்லி போன்றவர்களுக்கு இணையாக தத்துவங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் திருவள்ளுவர் திருக்குறளில் பதித்திருக்கிறார். ஆனால் அவரது சொந்த மண்ணுக்கு வெளியே அவரது புகழ் இன்னும் பரவவில்லை. திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுக்க ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் தலையாய குறிக்கோள்.மேலும், அமெரிக்கர்களுக்கும், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்களுக்கும் திருக்குறளைப் பற்றி அறிய வைக்கும் ஒரு முயற்சி இது. திருக்குறள், மனித வாழ்க்கைக்கு எப்படி ஒரு வழி காட்டியாக விளங்கும் என்பது இந்த மாநாட்டில் ஆராயப்படும்.

பன்னாட்டு திருக்குறள் மாநாடு உருவான கதை

வாசிங்டன் டிசி வட்டாரத்தில் வசிக்கும் தமிழ் உணர்வாளர்களில் முனைவர்.பிரபாகரன் அவர்கள் திருக்குறள் மீது மிகுந்த பற்றுடையவர். திருக்குறளை ஆழ்ந்து படித்து அறிந்தவர். 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முனைவர்.பிரபாகரன் ஒரு இலக்கிய ஆய்வுக் கூட்டத்தை தொடங்கினார். இந்தக் கூட்டம் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கூடுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் திருக்குறளின் ஒரு அதிகாரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த அதிகாரத்தில் உள்ள 10 குறள்களும் அலசப்படுகின்றன. பரிமேலழகர், மு.வரதராஜன், கலைஞர் கருணாநிதி, Dr. S.M. Diaz, Rev. Drew & John Lazarus போன்ற ஆய்வாலர்களின் திருக்குறள் பற்றிய உரைகள் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. இப்படி முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் தொடங்கி தற்போது வெகுளாமை வரை இந்த இலக்கிய ஆய்வுக் கூட்டம் வெற்றிகரமாக முன்னேறியிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு கிடைத்த வரவேற்பையும், பங்கேற்பையும் பார்த்த பிரபாகரன், வாசிங்டன் டிசியில் ஒரு திருக்குறள் மாநாடு நடத்த வேண்டும் என்ற விருப்பத்தை சென்ற வருடம் தெரிவித்தார். அதற்குக் கிடைத்த பெரும் ஆதரவைக் கொண்டு, அன்றிலிருந்து மாநாட்டு ஏற்பாட்டு வேலைகள் தொடங்கப்பட்டு, இன்று வரை தடங்கலின்றி சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 4 மாதங்களே இருக்கும் இந்த நிலையில், எங்களது உழைப்பாலும் உங்களது ஆதரவாலும் இந்த மாநாடு பெரும் வெற்றியடையும் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம்.

நன்றி,
மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு